Saturday, August 4, 2007

விடுதலை போரின் கலங்கரை விளக்கம்:








18,19-ஆம் நூற்றான்டுகளின் காலனியதிக எதிர்ப்பு போராட்டங்களில்,துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு-நிசாம், மருது-தொண்டைமான் என தியாகத்தையும்,துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது.ஆனால் இந்த எல்லைகோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது.

எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாகா அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே 'விடுதலையைக்' காணும்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள்.

உண்மையான அட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்து கொண்டு மன்னராட்சிக்குரிய அடயாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்தன் மூலம் துரோகிகளைத் திருப்திபடுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள்,20-ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்

இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி,பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாலித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.


1906-இல் இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான்.இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய இலட்சோப இலட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.

"வன்முறைப்பாதையா, அகிம்சைப்பாதையா" எனப் போராட்ட வழிமுறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதை போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதை போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20-ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.

1921,1930,1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்த்ப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத்துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார்.

காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, 'சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.

இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.

"...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்." -சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19-ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயேக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ , பல்லாயிரக்கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உண்ர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போரளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.

பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியை சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞந்தான். உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரண்த்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது.

பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?

1919-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்ன்ர் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார்

1921-ல் காந்தி 'ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள்-தொழிலாளர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்

1922 பிப். 5 ஆம் தேதி உ.பியில் உள்ள செளரி செளரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் செளரி செளரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஓத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏற்த்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின்மையும் சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியின் மீது துவக்கத்திலேயே விமர்சனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப்பெற்றனர். 1924-இன் இறுதியில் சச்சிந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தார்.

இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லகரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9-ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பண்த்தை கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உண்ர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர அனைவரும் கைது செய்யப் பட்டனர்.இயக்கம் செயலற்று நின்றது.
இந்தத் தேக்க நிலையில், 1926-இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் 'நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பை தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன்.

1927 இறுதியில் ராம்பிரசாத் ப்ஸ்மில், ராஜேந்திர லகிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டன்ர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925-லிருந்து 1927-க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினுடாக, 1917-இன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம் தான் அவருடைய வள்ர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சுழ்நிலையை 'நான் நாத்திகன் - ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

"அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன்.அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம்.
இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்தியமென்று தோன்றியது.....எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசன்மற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒரு நாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். "கற்றுண்ர்" எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கண்ந்தோறும் எதிரொலித்தது.....”

"நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின். எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவன, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான் புரிதலோடிருக்க வேண்டும்.”

"களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புகளையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்."

பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செரிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாக பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில் ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வேரா முதலான தோழர்கள் முயன்றனர்.

இதனடிப்படையில் 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை குடியரசு கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக(இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.

காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் - அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி- புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928-இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30-ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது, 'பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசால் கடுமையாக தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வட இந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச- 17 அன்று, அவர் மீது தடியடி நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுவதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து சோ.கு.க சுவரொட்டி ஓட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியாளர்கள் நாடு முழுவதும் போற்றப்பட்டனர்.

தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தோழிலாளர்-விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோக்ஷ், 1928- சாண்டர்ஸ் கொலைக்குப் பிற்கு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த போழுது "நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங்கள். நாங்கள் ஆங்கில ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்" என்று பகத்சிங் கூறியதாக பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், 'மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.

அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928-இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக 'தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.

'தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்திய கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடிந்த பின்னால் ஒரு வேலை தப்ப முடியவிலையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங், இவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திட்டமிட்டப்படி, 1929 ஏப்ரல் 8-ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 'தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டுகளை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். 'செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரட் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்கு தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.

1929 ஜுன் 6-ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.

"எங்களது ஒரே நோக்கம் 'செவிடர்களைக் கேட்கச்செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித்தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்ற்க் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்."

அன்று சர்வதேசப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜுன் - 12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜுலை- 13ம் தேதியன்று உண்ணாவிரத்ததை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் ப்ங்கேற்றனர்.அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதிந்தாஸ் செப்டம்பர் 13- ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச்செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜுலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக்கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்தாலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்கு பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே- 1 -ம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பற்க்க விடப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்" என அறிவித்தது. பிறகு 'தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7-ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரிவந்த காங்கிரசுக் கட்சி, 1039-ல் 'பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசை புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931-ல் 'குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.

"..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் ."

சட்ட மறுப்பு இயக்கத்தின் வள்ர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான -ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: "முடிவில், அவர் (காந்தி) ....பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையை தள்ளி வைக்கக் கேட்டுக்கொண்டார்."

(கோப்பு எண்: 5- 45/1931- 2 , உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு).

"அவர் (காந்தி) வெலியேறும் போழுது, மார்ச்- 4-ல் பகத்சிங் தூக்கிலப்பட இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலிப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகரித்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை."

(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது - 1970 சுதந்திர தின மெயின்ஸ்ட்ரீம். தமிழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து.)

இதனிடையே, 1930 மே 28- ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றார் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27-ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய 'ஆல்ஃபிரெட் பூங்காவில்' வீரமரணமடைந்தார்.

இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்- 23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். 'சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், 'வாருங்கள் போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி , 'இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வறு மரண்த்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.

ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரசு மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.

கராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரசு கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. "அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது." எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசு கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.

'புரட்சி என்றாலே பகத்சிங் என்று தன் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஓளியில் காந்திய காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.

மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையை போல, சட்லஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946-ல் தெலிங்கானா விவசயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. "இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று 1857-ல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாக புரிந்தது. தூரோகிகளின் கைக்கு அதிகாரத்தை கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.

தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் பாடங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலை போராட்டத்தின் வீரமரபு, 1968 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.

இதோ துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்கவுஸி சிதம்பரம். " மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக்கொள்ளாதே " என்று மரணப்படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். " மகாப் பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை" என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.

கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்த பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: "இந்த போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை...."

அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்


உத்தம்சிங் நூற்றாண்டு விழா:


இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

"என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்" என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.

இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக "ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்" என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

"துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்" என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

"அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை" என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். "மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்" என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை" என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. "அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது" என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, "பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ" என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். "அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்" என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.

இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

"இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்" என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் "கத்தியின்றி இரத்தமின்றி" காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி "தேச பக்தி"ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட "தடா" எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

"இன்னொரு ஜாலியன்வாலாபாக்" என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த "ஜாலியன்வாலாபாக்" படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.

"பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது" என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று "தடா", "பொடா", "மிசா", "மினிமிசா", தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் "ஜாலியன் வாலாபாக் படுகொலை"யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.

காதல், தியாகம், மரணம்:பகத்சிங்கின் பார்வை


காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. புரட்சியாளர்கள் எனப்படுவோர் 'உணர்ச்சியற்ற எந்திரங்கள்' என்ற அவதூறையும், 'உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்' என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.

சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகிவிட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

அன்புள்ள சகோதரருக்கு,

இந்தக் கடிதம் கைக்குக் கிடைப்பதற்குள் நான் எனது இலட்சியம் நோக்கிய திசையிலே வெகுதூரம் சென்றிருப்பேன். என்னை நம்பு; இப்பொழுதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்குத் தயாராகிவிட்டேன்..... நானும் வாழ்க்கையின் ஆசைகளும் அபிலாஷைகளும் நிறைந்தவன் தான் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்; இருந்தாலும் வேண்டி வந்தால் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். மெய்யாகவே தியாகம் செய்வேன். மனிதன் உண்மையான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இவை இடையூறாக இருக்கவே முடியாது. இதற்கான சான்று உனக்கு விரைவிலேயே கிடைக்கும்.

ஒரு மனிதனின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயம் காதல் ஒரு மனிதனுக்கு, எங்காவது உதவியாக இருந்திருக்கிறதா என்பதுதான். இதற்கான பதில் -- ஆம், இருந்திருக்கிறது என்பதுதான். ஆம், அவர்தான் மாஜினி. தமது முதல் புரட்சியின் தோல்வியையும், தமது கடுமையான தோல்வியின் வேதனையையும், இறந்துவிட்ட தமது சகாக்களின் நெஞ்சைப் பிழியவைக்கும் நினைவுகளையும், அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தன என்று படித்திருப்பாய். ஆனால், அவருடைய அன்புக் காதலியிடமிருந்தான ஒரு கடிதம் மட்டும் வராமல் இருந்தால், அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்கலாம்; அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இந்தக் கடிதம்தான், அவரை மற்றவர்களைப் போலவே வலிமையுள்ளவராக ஆக்கியது. சொல்லப்போனால் மற்றவைகளைவிட மிக வலிமையானவராகச் செய்தது.

காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிள்ர்ச்சி. அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல் காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூறமுடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே - அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில் தான் விளையாடுகிறார்கள்.

மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது. எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.

இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம். காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காமவெறிகளுக்கு உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசுபடாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்....

கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு மனநிலையாக அமையும்.

ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனி நபரின்பால் ஏற்படும் காதலை, அதுவும் கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன். ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனி மனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல், உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்.

அன்புள்ள சகோதரா,

உன் கடித்தத்தை, நான் மிகுந்த கவனத்துடன் திரும்பத் திரும்பப் படித்தேன். மாறியுள்ள சூழ்நிலைகள் நம்மை வெவ்வேறான விதத்தில் ஈர்த்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். நீ சிறைக்கு வெளியே இருந்த காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விசயங்கள் இப்பொழுது உனக்கு இன்றியமையாதவை ஆகியுள்ளன.

அதுபோல, நான் சிறைக்கு வெளியே இருந்தபோது ஆதரித்துவந்த விசயங்கள் இப்பொழுது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. உதாரணமாக, இதற்கு முன்னர், தனிமனிதரின் காதலுக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தேன்; ஆனால் இப்போதோ, அந்த காதலுக்கு, என் இதயத்திலும் மனதிலும் குறிப்பிட்ட இடம் எதுவுமே இல்லை.

வெளியில், நீ அதை வன்மையாக எதிர்த்தாய், ஆனால் இப்போதோ, இதுபற்றிய உன் கருத்துக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன; மானுட வாழ்க்கையில், காதல் இன்றியமையாத பகுதி என்றும் இப்போது நீ கருதுகிறாய். இந்த அனுபவம் உனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தற்கொலையைப்பற்றி நான் ஒருநாள் உன்னிடம் பேசியது, உனக்கு நினைவிருக்கலாம். குறிப்பிட்ட ஒருசில சந்தர்ப்பச் சூழ்நிலைகளில், அது சரியாகவே இருந்திருக்கலாம் என்று நான் அப்போது கூறினேன். ஆனால், நீ எனது கருத்துக்களை எதிர்த்தாய்...

இத்தகைய கோழைத்தனமான செயலை, நியாயமானது என்று கருதவே முடியாது என்று நீ பரிகாசமாக கூறினாய். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றியதான உன் கருத்துக்களும்கூட, இப்பொழுது முழுக்க முழுக்க மாறிவிட்டன என்பதை நான் உணருகிறேன். இப்போது, குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கீழ், அது நியாயமானது மட்டுமல்ல இன்றியமையாதது என்றும் நீ கருதுகிறாய்.

ஆனால், தற்கொலை என்பது முற்றிலும் கோழைத்தனமான, வெறுக்கத்தக்க குற்றம் என்றும் நீ முன்னர் கூறிய அதே கருத்துக்களை ஒத்தவையாகவே எனது கருத்துகளும் இன்று அமைந்துள்ளன. எந்த ஒரு மனிதனுமே, அதனை நியாயமானதாகக் கருதமுடியாது. அப்படியிருக்க, புரட்சியாளர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?....
இதுதவிர, தங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றே நம்மில் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் விசயத்தில், மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர், மரண தண்டனையும் நிறைவேற்றப்படும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அது ஒரு அழகான இனிய சாவாகவும் இருக்கும்.

ஆனால், தற்கொலை செய்து கொள்வது என்பது, குறிப்பிட்ட சில இன்னல்களையும் துன்பங்களையும் விட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை விடும் கோழைத்தனம். இன்னல்கள், ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்பதை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நானோ- நீயோ - நம்மில் யாருமே இன்னும் இன்னல்களை அனுபவிக்கவில்லை; நமது வாழ்க்கைகளின் இந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்குகிறது....

"புரட்சியாளர்களாக" இருந்து வருவதில், பெருமைகொள்ளும் நம் போன்ற மக்கள், தாங்களாகவே தொடங்கியுள்ள போராட்டங்கள் வாயிலாக வரவழைத்துக் கொண்டிருக்கும், இன்னல்களையும் இடர்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக் கொள்வத்ற்குத் தயாராகவே இருக்க வேண்டும்....

சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் வரை துன்பங்களை அனுபவித்த ஒரு மனிதர், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் கொண்டிருந்த அதே கருத்துக்களையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்று நீ எழுதுகிறாய். சிறைச்சாலைச் சூழ்நிலைகள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் நொறுக்கி பொடியாக்கிவிடும் என்றும் காரணம் காட்டுகிறாய்.

சிறைக்கு வெளியே நிலவும் சூழ்நிலை, நமது கருத்துக்களுக்கு இசைவானதாக இருக்கிறதா என்று நான் கேட்கட்டுமா? தோல்விகளின் காரணமாக, நாம் அவற்றைக் கைவிட்டிருக்க முடிந்திருக்குமா? இந்தத் துறையில் நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்!

கம்யூனிசத்தின் படைப்பாளியான கார்ல் மார்க்ஸ், இந்தச் சிந்தனையை உருவாக்கிடவில்லை என்றும் நான் கூறுவேன். குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களை உருவாக்கியதே ஐரோப்பாவில் தோன்றிய தொழில்துறைப் புரட்சிதான்! அவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவராக இருந்தார். காலச்சக்கரத்துக்கு, ஓரளவிற்கு, குறிப்பிட்ட ஒரு உந்துதலை அளிப்பதில் கார்ல் மார்க்ஸ் தம் சொந்த முறையிலே மிகவும் உதவியாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த நாட்டில், கம்யூனிசம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு, நான் (ஏன் நீயும் கூட) உயிர் கொடுக்கவில்லை. மாறாக, நமது காலங்கள் மற்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள், நம்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் அது. இந்தக் கருத்துக்களை எங்கும் பரப்பிடச் செய்வதில் நாமும் எளிமையான அளவில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்தப் பொறுப்பான பணியின் சுமையை நாம் நம்மீது சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதால், அப்பணியைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறுகிறேன். கஷ்டங்களைத் தவிர்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது மக்களுக்கு நல்வழி காட்டாது; மாறாக, அது ஒரு பிற்போக்குச் செயலாகவே அமையும்....

வாழ்வு, மரணம் போன்ற விசயங்களிலும் நாம் முற்றிலும் உலகாயத முறையிலேயே சிந்திக்க வேண்டும். ஒருமுறை, நான் தில்லியிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்ட போது, உணவு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், இந்த விசயத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட நான் தயாராக இல்லாத்தாலும், என் உயிரைக் காப்பதில் நாட்டம் காட்டாததாலும், நான் வாழ்க்கையில்விரக்தி அடைந்து விட்டேன் என்பதை அது நிரூபித்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். என் மரணம் ஒரு தற்கொலைக்கு ஒப்பாகவே இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம்.

அதற்கு நான் சொன்ன பதில்: "என் போன்று திடமான நம்பிக்கையும் எண்ணங்களும் கொண்ட ஒருவன், வீணாக இறந்துபோவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையை அதிக அளவு பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். முடிந்தவரை மானுட நல்ன்களுக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம். குறிப்பாக, துயரமோ கவலையோ இன்றி வாழும் மனிதன், தற்கொலையைப் பற்றி சிந்திப்பதே முறையற்றது என்றுதான் கருதுவான். அப்படியிருக்க, அச்செயலில் எப்படி இறங்குவான்?" அவர்களுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன்.

உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறாயா? எனக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை; இதுவிசயத்தில், தண்டனைக் குறைப்போ அல்லது முழு அளவிற்கான மன்னிப்போ அளிக்கப்படும் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை. அப்படியே பூரண மன்னிப்பு அளிக்கப்பட்டாலும்கூட, அது அனைவருக்கும் அளிக்கப்படமாட்டாது. அதிலும் எனக்கு மன்னிப்பு கிடைக்காது; இருந்தும்கூட நமக்கு விடுதலையளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மக்கள் கிளர்ச்சியாக நமது இயக்கம் மலர்ந்து உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்வது என்பது விருப்பம்.

படுகேஸ்வர் தத்திற்கு எழுதிய கடிதம்

அன்புள்ள சகோதரருக்கு,

எனக்கு தண்டனை விதிக்கப்பட்டு விட்டது- தூக்குத் தண்டனை. என்னைத்தவிர, தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் பல குற்றவாளிகள் உள்ளனர். தூக்கு மேடையிலிருந்து எப்படியாவது தப்புவதற்காக அவர்கள் இறைவனிடம் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்களிடையே நான் ஒருவந்தான் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தூக்குமரத்தில் தொங்கும் பாக்கியத்திற்காக, அந்த நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒரு புரட்சியாளர், தன் உயிரை தியாகம் செய்ய முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தூக்கு மேடையேறுவதன் மூலம் நான் உலகிற்கு எடுத்துக் காட்டுவேன்.

எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் உனக்கோ ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. புரட்சியாளர்கள், தங்களின் இலட்சியங்களுக்காகச் சாவது மட்டுமல்ல; அவர்கள் உயிருடன் இருக்கும் போது பல கஷ்டங்களையும் எதிர்த்திட முடியும் என்பதை, நீ உயிருடன் இருந்து உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

மரணம் என்பது உலகப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாக ஆகிவிடக்கூடாது; மாறாக, தற்செயலாகத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய புரட்சியாளர்கள் தூக்கு மேடை ஏறவும் அஞ்சாமல் இருப்பது மட்டுமின்றி, சிறைச்சாலையின் குறுகிய இருண்ட அறைகளில் அடைக்கப்பட்ட நிலையிலும், படுகேவலமான அநியாயங்களையும் அட்டூழியங்களையும் பொறுத்துக் கொள்ள முடியும் என்பதையும், உன் சொந்த வாழ்க்கை மூலமாகவே உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

உன்
பகத்சிங்.


தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

தோழர்களே!

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.

என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.

ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.